பெஸ்தாரி ஜெயா, அக். 17- விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு காசே@அவானா திட்டத்தின் கீழ் உதவி
பெறுவதற்கு 16 தமிழ் ஊடகவியலாளர்களிடமிருந்து தாங்கள்
விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக தேசிய செய்தி நிறுவனமான
பெர்னாமாவின் முதன்மை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜூ கூறினார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட
ஊடகவியலாளர்களின் பெயர்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறிய
அவர், எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் உதவித் தொகையை
அவர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் தகுதியுள்ள ஊடகவியலாளர்களை
அடையாளம் காணும் பணியில் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும்
கிளப்புகளுடன் தாங்கள் இணைந்து ஈடுபட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டார்.
மலேசிய நண்பன் பத்திரிகையின் முன்னாள் மொழி பெயர்ப்பாளரான
கே.லோகநாதனுக்கு காசே@ஹவானா திட்டத்தின் கீழ் உதவி வழங்கும்
நிகழ்வில் தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங்குடன் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெஸ்தாரி ஜெயாவிலுள்ள லோகநாதனின் வீட்டிற்கு துணையமைச்சர்
நேற்று நேரில் சென்று தீபாவளி அன்பளிப்பு மற்றும் உதவித் தொகையை
வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரை அடையாளம் காணும் பணி சீராக
நடைபெற்று வருவதாகவும் பெயர்ப் பட்டியல் கிடைத்தவுடன் அதனைச் சரிபார்த்து அங்கீகரித்தவுடன் உதவித் தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்படும் என்றும் அருள் ராஜூ தெரிவித்தார்.
இதனிடையே, தமக்கு உதவ முன்வந்த பெர்னாமா மற்றும்
அரசாங்கத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக லோகநாதன்
(வயது 43) கூறினார். தீபாவளி நெருங்கி வரும் வேளையில் வழங்கப்பட்ட
இந்த உதவி பெருநாளைக் கொண்டாடுவதில் ஏற்படக்கூடிய நிதிச்
சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்றார்.
ரொக்கத் தொகை, உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை
வழங்கியதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த
பணத்தைக் கொண்டு அடுத்த சில மாதங்களுக்கு எனக்குத் தேவையான
பொருள்களை வாங்கிக் கொள்வேன் என அவர் சொன்னார்.
தேசிய ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 2023ஆம் அண்டு
தாபோங் காசே@ஹவானா நிதித் திட்டம் தொடங்ப்பட்டது. சிரமத்தில்
இருக்கும் நடப்பு மற்றும் முன்னாள் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதை
இந்த நிதித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


