குவாந்தான், அக். 17- மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த
போது திடீரென செம்பனை மரம் விழுந்ததில் இந்திய மாதுவும் அவரின்
மகனும் படுகாயங்களுக்குள்ளாயினர். இச்சம்பவம் கோல லிப்பிசில் உள்ள
ஜாலான் லிப்பிஸ்-பெந்தா சாலையின் 23வது கிலோ மீட்டரில் நேற்று
நிகழ்ந்தது.
நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெந்தா,
தாமான் தெராத்தாய் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமி
(வயது 37) கழுத்தில் காயங்களுக்குள்ளானதாக கோல லிப்பிஸ் மாவட்ட
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் இஸ்மாயில் மான் கூறினார்.
அந்த மாதுவின் மகனான கே.தென்னரசு (வயது 7) தலை மற்றும் நெஞ்சில்
பலத்த காயங்களுக்குள்ளானதாகக் கூறிய அவர், அவர்கள் இருவரும்
கோல லிப்பிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அவ்விருவரும் பள்ளியிலிருந்து வீடு
திரும்பிக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்தை அடைந்த போது மோசமான
வானிலை காரணமாக பலத்தக் காற்று வீசியது. மலைச்சாரலில் இருந்த
செம்பனை மரம் ஒன்று திடீரென சாலையில் மோட்டார் சைக்கிளில்
பயணித்துக் கொண்டிருந்த அவ்விருவர் மீது விழுந்தது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 09-3121999 என்ற எண்களில்
லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படி
அவர் கேட்டுக் கொண்டார்.


