ஷா ஆலம், அக். 16 - அந்நிய நாட்டினரை கவுண்டர் செட்டிங் எனப்படும்
முகப்பிட அமைப்பு முறையைப் பயன்படுத்தி அந்நிய நாட்டினரை
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட
47 கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இந்நடவடிக்கையை முறியடிப்பதற்காக அரசாங்கம் எடுத்த மூன்று
நடவடிக்கைகளின் வாயிலாகக் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் சட்டவிரோத
அந்நியப் பிரஜைகள் உள்பட 1,285 பேர் கைது செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.
மலேசிய குடிநுழைவுத் துறை, அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் இதர அமலாக்க நிறுவனங்களின்
ஒத்துழைப்புடன் 47 கும்பல்களை நாங்கள் முறியடித்துள்ளோம் என்று
மக்களவையில் இன்று கோத்தா பாரு தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ
தக்கியுடின் ஹசான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்
தெரிவித்தார்.
இந்த கவுண்டர் செட்டிங் முறையை உள்துறை அமைச்சு மிகக்
கடுமையாக கருதுகிறது. இத்தகையச் செயல்கள் உயர்நெறியை மீறும்
வகையில் உள்ளதோடு ஊழலுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது.
ஆகவே, இந்த விஷயத்தில் நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும்
போக்கை கடைபிடிக்க முடியாது என்றார் அவர்.
இந்த விஷயத்தை நாம் நிர்வாக நடைமுறைக் கோணத்திலும் அணுக
வேண்டும். திறனை மேம்படுத்தும் அதேவேளையில் மாற்றங்களைச்
செய்வதிலும் முழு ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று அவர்
சொன்னார்.
தகுதி உள்ளவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவதை உறுதி
செய்வதற்காக நாட்டின் நுழைவாயில்களில் உள்ள முகப்பிடங்களில்
சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இவ்வாண்டு
செப்டம்பர் வரை பல்வேறு காரணங்களுக்காக 25,214 பேருக்கு நாட்டிற்குள்
நுழைவதிலிருந்து தடை விதிக்கும் என்.டி.எல். குறிப்பு வழங்கப்பட்டது
என்றார்.


