(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக் 16 - இம்மாதம்18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்
கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கு
முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மனிதவளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பாராய்டு கூறினார்.
நாட்டிலுள்ள அனைவரின் கல்வி மேம்பாட்டில் இந்த வரவு செலவுத்
திட்டம் கவனம் செலுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர்,
மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி
காண்பதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றார்.
மனித வளத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில்
அந்நிய முதலீட்டாளர்களை நான் சந்திக்கும் சமயங்களில் நாட்டில்
போதுமான அளவு திறன் பெற்றத் தொழிலாளர்கள் இல்லை என அவர்கள்
என்னிடம் குறைபட்டுள்ளனர்.
ஆகவே நாம் தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் கல்வியில் முதலீடு
செய்வதன் மூலம் அனைத்துலக நிலையில் போட்டியிடும் ஆற்றலைக்
கொண்டிருக்க முடியும்.
அடுத்ததாக, நாட்டில் மருத்துவத் துறையிலும் மேம்பாடு
காணப்படவேண்டும். மலேசியர்கள் மருத்துவத்திற்காக அதிகம் செலவு
செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இது பெரிய பிரச்சனையாக
உள்ளது. ஆகவே, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்குவதை
அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அம்மருத்துவமனைகளில்
அதிகப்படியாக கட்டணம் விதிக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என
அவர் கோரிக்கை விடுத்தார்.
அதே சமயம், அரசாங்கம் மருத்துவமனைகள் சிறப்பான மருத்துவனைகள்
நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருவதைச்
சுட்டிக்காட்டிய அவர், செர்டாங், சுங்கை பூலோ மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற பலர் அங்கு வழங்கப்படும் சிறப்பான சேவைகள் மற்றும்
வசதிகள் குறித்து தம்மிடம் மனநிறைவு தெரிவிதுள்ளனர் என்றார்.
இருப்பினும், நாட்டில் இன்னும் பல மருத்துவ மருத்துவனைகள்
இத்தகைய வசதிகளைக் கொண்டிருக்காததை அரசாங்கம் கருத்தில்
கொண்டு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என
பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.
அடிப்படை வசதிகளைத் தரம் உயர்த்துவதில் மத்திய அரசு, மாநில அரசு
மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவதில் குறிப்பாக வெள்ளப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட
வேண்டும். நாடு எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் அடிப்படை வசதிகள்
சிறப்பானதாக இல்லாத பட்சத்தில் அது வளர்ச்சியடைந்த நாட்டிற்கான
அடையாளத்தை பிரதிபலிக்காது.
மேலும், நமது நாடு பூமத்திய ரேகையில் அமைந்துள்ளது. இங்கு
வானிலையும் நிச்சயமற்றதாக உள்ளது. நாம் எப்போதும் தயாராக இருக்க
வேண்டும். வெள்ள நீரை விரைந்து வெளியேற்றும் அளவுக்கு
கால்வாய்கள் சிறப்பான தரத்தை கொண்டிருப்பதை உறுதிசெய்ய
வேண்டும் என்றார் அவர்.


