(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 16 - இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான்,
லிட்டில் இந்தியா செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர்
மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளி பொது உபசரிப்பில் பொது மக்கள்
திரளாக கலந்து கொள்ளுமாறு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு கேட்டுக் கொண்டார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் மாலை 7.00
மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த பொது
உபசரிப்பில் கலை, காலசார நிகழ்ச்சிகளோடு பல்வேறு சிறப்பு
நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இந்த பொது உபசரிப்பை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கும்
நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். வசதி குறைந்த உயர்கல்வி
மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வழங்குவது மற்றும் சிலாங்கூர்
மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசின் மானியமான 50
லட்சம் வெள்ளியை பகிர்ந்தளிப்பது ஆகியவையும் அடங்கும் என அவர்
தெரிவித்தார்.
இது தவிர ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக கிள்ளான்
மாவட்டத்தைச் சேர்ந்த 15 தொழில் முனைவோருக்கு வர்த்தக
உபகரணங்கள் வழங்கும் அங்கமும் இந்நிகழ்வில் இடம் பெறும் என்று
அவர் சொன்னார்.
மேலும், மாநிலத்திலுள்ள ஆலயங்களுக்கு மூன்றாம் கட்ட மானியம்
வழங்கும் நிகழ்வுக்கும் இங்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வில் 68
ஆலயங்களுக்கு 600,000 வெள்ளி வழங்கப்படும் என்றார் அவர்.
விருந்துபசரிப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்
சிறார்களுக்காக பிரத்தியேகப் பரிசையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
இப்பரிசை பெறும் வாய்ப்பை தவற விட வேண்டாம் என சிறார்களைக்
கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த பொது உபசரிப்பில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத தலைவர்கள் ஆகியோருக்கும்
பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.


