கோலாலம்பூர், அக். 16 - நாட்டின் நுழைவாயில்களில் பணி புரியும்
அமலாக்க அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கவுண்டர் செட்டிங் எனப்படும்
முகப்பிட அமைப்பு முறையை பயன்படுத்தி அந்நிய நாட்டினரை
மலேசியாவுக்குள் கொண்டு வரும் கும்பல்களின் நடவடிக்கை உள்ளிட்ட
விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும்
நடவடிக்கைகள் குறித்து இன்றைய வாய் மொழி கேள்வி நேரத்தின் போது
கோத்தா பாரு தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ
தக்கியுடின் ஹசான் உள்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார் என
நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இன்றைய கூட்ட
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் இலக்கவியல் திறனை மேம்படுத்துவதற்கான
முயற்சிகள் மற்றும் புற நகர்ப்பகுதிகளில் போதுமான உபகரணங்கள்
இல்லாமை குறித்து கல்வியமைச்சரிடம் லேடாங் தொகுதி பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட நோ வினவுவார்.
மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் அமராததது குறித்தும் நாட்டின் கல்வி
முறையிலிருந்து அத்தரப்பினர் விடுபடாமலிருப்பதை உறுதி செய்வதற்கு
அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் பாலிங் தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஹசான் சஹாட் கல்வியமைச்சரிடம்
கேள்வி எழுப்புவார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2024ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட
(திருத்தம்) மசோதா மீதான விவாதம் தொடங்கும். நாட்டின் குடியுரிமை
பெறுவற்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து
18 வயதாக குறைப்பதும் இதில் அடங்கும்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான மூன்றாவது
கூட்டத் தொடர் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் டிசம்பர் 12ஆம்
தேதி வரை 35 நாட்களுக்கு நடைபெறும்.


