ரமல்லா, அக். 16 - காஸா தீபகற்பத்தின் மத்தியிலுள்ள பகுதிகளில்
வசிக்கும் பத்து வயதுக்கும் கீழ்ப்பட்ட சுமார் 93,000 சிறார்களுக்கு
போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை ஐக்கிய நாடுகள் சபையின்
பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி நிறுவனம்
வழங்கியது.
காஸாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போலியோ தடுப்பு மருந்து
வழங்கும் முன்னெப்பின் இரண்டாம் கட்ட நிகழ்வாக இது அமைந்துள்ளது.
அதிகரித்து வரும் போர் மற்றும் தொடரும் சவால்களுக்கு மத்தியில்
காஸா தீபகற்பத்தின் மத்தியில் இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு
மருந்து வழங்கும் திட்டம் கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டது என்று
அந்த பணி நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
போர் நிறுத்தமும் அமைதியுமே சிறார்களுக்கு தற்போது தேவைப்படும்
சிறந்த தடுப்பு மருந்தாக விளங்குகிறது என்று அநத அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாக பாலஸ்தீனத்தின் வாஃபா செய்தி நிறுவனம்
தெரிவித்தது.
காஸா தீபகற்பத்தில் உள்ள பத்து வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு
போலியோ தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தின் இரண்டாம் கட்டப்
பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகப் பாஸ்தீன சுகாதார அமைச்சர் மஜிட்
அப்துல் ரமடான் கூறினார்.
இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் போது சிறார்களுக்கு வாய்வழியாக
தடுப்பு மருந்து வழங்கப்படும். சிறார்கள் கூடுதல் நோய் எதிர்ப்புச்
சக்தியைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த தடுப்பு மருந்து வைட்டமின் ஏ
சக்தியை வழங்குகிறது என அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மொத்தம் 591,700 சிறார்களுக்கு
போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசித் திட்டத்தை நிறைவு செய்வதற்காக அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


