கோலாலம்பூர், அக். 16 - ஆள் கடத்தல் உள்ளிட்ட கடுங் குற்றங்கள்
சம்பந்தப்பட்டுள்ள காரணத்தால் குளோபல் இக்வான் சர்வீசஸ் மற்றும்
பிசினஸ் ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் (ஜி.ஐ.எஸ்.பி.எச்.) உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தைப் (சோஸ்மா) பயன்படுத்துவது நியாயமானதே என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை
எளிதாக்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
நாங்கள் நிலையான செயலாக்க நடைமுறைகளைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் கைது நடவடிக்கைகளின் அளவு கணிசமாக உள்ளது. தடுப்புக் காவல்
அனுமதியை நாங்கள் கோருவோம். நீதிமன்றம் பொதுவாக ஏழு நாட்களை
வழங்குகிறது.
எங்கள் விசாரணைகள் அதற்குள் முடிவடையாத பட்சத்தில் நாங்கள்
கூடுதல் தடுப்புக் காவல் அனுமதியைக் கோருகிறோம். நீதிமன்றம் மேலும் ஏழு
நாட்கள் அல்லது சில நேரங்களில் ஐந்து அல்லது மூன்று நாட்கள் கூட
வழங்கலாம். கைதிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால்
விசாரணையை முடிக்க இந்த அவகாசம் போதுமானதாக இல்லை என்று
சைபுடின் கூறினார்.
கணிசமான பொருள், நிதி, அதிகாரம் அல்லது செல்வாக்கு பலன்களைக்
கொண்ட மனித கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களை உள்ளடக்கிய
இத்தகையச் செயல்கள் கூட்டாக நடத்தப்பட்டதை அம்சங்கள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
ஆனவே, தடுப்புக் காவல் காலம் முடிவடைந்த பிறகு சோஸ்மா சட்டத்தைப்
பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் தண்டனைச் சட்டத்தின் 130வி பிரிவைப்
பயன்படுத்துவது பொருத்தமானது என்றார் அவர்.
மக்களவையில் நேற்று ஜி.ஐ.எஸ்.பி.எச். தொடர்பான அமைச்சரின் விளக்க அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜி.ஐ.எஸ்.பி.எச். உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அவற்றில் கணிசமானத் தொகை பல்வேறு சொத்துக்களை ரொக்கமாக வாங்க பயன்படுத்தப்பட்டன என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.


