ஷா ஆலம், அக். 16 - வெள்ளம் காரணமாக உலு பெர்ணம் உத்தாரா,
கம்போங் ஸ்ரீ கிளேடாங்கைச் சேர்ந்த 118 பேர் இரு தற்காலிக நிவாரண
மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பத்து சிறார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை உட்படுத்திய அந்த 47
குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் சிலாங்கூர் மற்றும் பேராக் மாநில
எல்லையில் உள்ள கோல சிலிம் தேசியப் பள்ளியிலும் கோல சிலிம்
பொது மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முவாலிம் மாவட்ட
பேரிடர் மேலாண்மை செயல் குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினரின்
ஒத்துழைப்புடன் சீராக மேற்கொள்ளப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட
சமூக நலத் துறை கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் மற்றும்
பள்ளிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக க் கூறப்படுகிறது.
இதனிடையே, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் நிவாரண
மையங்களில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பு மற்றும்
சமூக நலனில் அக்கறை காட்டப்படுவதாகவும் உலு சிலாங்கூர் மாவட்ட
துணை அதிகாரி மஸாலான் ஜைனுடின் கூறினார்.
மூவாலிம் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன்
நிவாரண மையங்களை பகிர்ந்து கொள்ள் வேண்டியுள்ளதால் அங்கு
தங்கியுள்ளவர்களின் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சுகாதாரத்தை உறுதி
செய்வது சற்று கடினமானதாக உள்ளது என அவர் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டார்.
நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி சிலிம் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து
உயர்வு கண்டு வந்தது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்
நிலைமை இன்னும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது.


