கோத்தா பாரு, அக்.15 - பல்வேறு வகையான போதைப் பொருள்களை
கடத்திய மற்றும் பதுக்கி வைத்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரைக்
கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கோடியே 91 லட்சத்து 70
ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 600 கிலோ யாபா போதை மாத்திரைகள்
மற்றும் ஹெரோயினைக் கைப்பற்றினர்.
இந்த சோதனையில் 652.4 கிலோ யாபா போதை மாத்திரைகளும் 2.6
கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறிய
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின், மலேசியாவில் இவ்வாண்டு
பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிகமான போதைப் பொருள் இதுவாகும்
என்றார்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திங்கள்கிழமை பாசீர் மாஸ்,
சாலோரில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொண்ட போலீசார் 32
வயதுடைய ஆடவனைக் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும்
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இடைத் தரகராக அந்த சந்தேகப்
பேர்வழி செயல்பட்டு வந்துள்ளான் என்று அவர் சொன்னார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும்
ஒவ்வொரு போதைப் பொருள் பாக்கெட்டுக்கும் இந்த சந்தேகப் பேர்வழிக்கு
தலா 100 வெள்ளி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று கிளந்தான் மாநில
போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
அவர் தெரிவித்தார்.
வாடகை வளாகங்களை போதைப் பொருளை சேமித்து வைத்து கிழக்குக்
கரை மாநிலங்களில் உள்ள சந்தைகளில் விநியோகம் செய்யும்
நடவடிக்கையில் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
சந்தேக நபரிடமிருந்து 61,000 வெள்ளி மதிப்புள்ள பெரேடுவா மைவி கார்
மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன
என்றார் அவர்.


