புத்ராஜெயா, அக்.14 - இங்குள்ள காம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானாவில் நேற்று நடைபெற்ற ஒற்றுமை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான மக்களவைக்கு முந்தைய விளக்கமளிப்பு அமர்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த இரகசியக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.
15வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான மூன்றாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 12ம் தேதி வரை 35 நாட்களுக்கு நடைபெறும் என நாடாளுமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மடாணி பொருளாதாரம், நாட்டின் வளப்பம், மக்களின் சுபிட்சம்" என்ற கருப்பொருளில் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவது இந்த கூட்டத் தொடரின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது.
2025 விநியோக மசோதா வரும் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது அக்டோபர் 28 முதல் நவம்பர் 5 வரை கொள்கை அளவில் விவாதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் பதில் அளிக்கும் அமர்வு நான்கு நாட்களுக்கு நடைபெறும்.
அதன் பின்னர் மேலவை அமர்வு நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும். மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற குழு நிலையிலான விவாதங்கள் இங்கு தொடரும்.
ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் நிறுவன விவகாரம் குறித்த அமைச்சரின் விளக்க அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.


