கோலாலம்பூர், அக். 14 - ஈராண்டுகளுக்கு முன்னர் தனது வங்கிக் கணக்கில்
சட்டவிரோதமான முறையில் 20 லட்சம் வெள்ளியை வைத்திருந்தது
தொடர்பில் சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளிலிருந்து வர்த்தகர்
ஒருவரை இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இந்த இந்த விசாரணையின் முடிவில் ஷரிபாக் ஓங் அப்துல்லா (வயது 51)
என்ற வர்த்தகருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை
அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி அஸ்ருள் டாருஸ்
தனது தீர்ப்பில் கூறினார்.
ஆகவே, அவரை குற்றச்சாட்டிலிருந்தும் வழக்கிலிருந்தும் விடுவிப்பதோடு
ஜாமீன் தொகையான 6,000 வெள்ளியையும் அவரிடம் திரும்ப
ஒப்படைக்கும்படி தாம் உத்தரவிடுவதாக அவர் தெரிவித்தார்.
தமக்குச் சொந்தமான சில வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 19
லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி எவ்வாறு கிடைத்த து என்று
விளக்கமளிக்கத் தவறியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதிக்கும் ஜூன் மாதம் 23ஆம்
தேதிக்கும் இடையே செந்துலில் உள்ள பேரங்காடி ஒன்றில்
இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 1,000 வெள்ளி அபராதம் அல்லது
ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க
வகை செய்யும் 1955ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் 29(1)வது பிரிவின்
கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.


