ஈப்போ, அக். 14 - தெலுக் இந்தான் அருகே உள்ள லங்காப், சுய் செக்
பகுதியில் வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில்
போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஐந்து ஆடவர்கள் கைது
செய்யப்ப்ட்டதோடு பல்வேறு வகையான 21.87 கிலோ போதைப் பொருள்
கைப்பற்றப்பட்டன.
முப்பது முதல் 47 வயது வரையிலான அந்த ஐந்து ஆடவர்களும் போதைப்
பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று
பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி மாட் அரிஸ் கூறினார்.
அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 21.8 கிலோ
மெத்தம்பெத்தமின் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப் பொருளின் மதிப்பு 787,527 வெள்ளியாகும் என்று இன்று
இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சோதனை நடவடிக்கையின் போது 26,000 வெள்ளி
மதிப்புள்ள இரு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல்
செய்யப்பட்டன என்றும் அவர் சொன்னார்.
இந்த கும்பல் கடந்த மாதம் முதல் போதைப் பொருள் விநியோகத்தில்
தீவிரமாக ஈடுபட்டு வந்துது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது எனக் கூறிய அவர், பேராக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
விநியோகிக்கப்படவிருந்த இந்த போதைப் பொருளை 218,664 போதைப்
பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்றார்.
கைது செய்யப்பட்ட 47 வயது ஆடவர் போதைப் பொருள் மற்றும் இதரக்
குற்றங்கள் தொடர்பில் 23 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாகவும்
இக்கும்பலின் இதர உறுப்பினர்களும் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்
பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காகக் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


