கோலாலம்பூர், அக். 14 - இன்று தொடங்கும் 15வது நாடாளுமன்றத்தின்
மூன்றாம் தவணைக்கான மூன்றாவது கூட்டத் தொடரில் ஸ்கேமர்
எனப்படும் மோசடிக் கும்பல்களை முறியடிப்பதற்கான சட்டத்தை
உருவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படும்.
இந்த கேள்வியை வாய் மொழி கேள்வி நேரத்தின் போது கோத்தா
மலாக்கா பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் கூ போய் தியோங் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் எழுப்புவார்.
தண்டனைச் சட்டம் (சட்டம் 574) மற்றும் குற்றவில் நடைமுறைச் சட்டம்
(சட்டம் 593) ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து
சட்டவிரோதக் கும்பல்கள் தங்களின் மோசடி நடவடிக்கைகளுக்கு
நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதால் இத்தகைய
மோசடிகளை தடுப்பதற்கான அரசாங்கம் முயற்சிகள் குறித்து விளக்கம்
கோருவார்.
ரஷியா-உக்ரேன் போர் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்ற
புவிஅரசியல் தாக்கங்களை தாக்குபிடித்து வலுவான பொருளாதாரத்தை
மலேசியா கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக சார்ந்திருக்கும்
போக்கை குறைத்து வர்த்தக மற்றும் முதலீட்டு வியூகங்களைப்
பல்வகைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சரிடம் லாருட் தொகுதி
பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனடின்
கேள்வியெழுப்புவார்.
மேம்பாட்டிற்கான பல்வேறு தேவைகளைச் சமநிலைப்படுத்தும்
அதேவேளையில் நாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை
தொடர்ந்து பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பாலிக்
பூலாவ் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ முகமது பக்தியார் வான் சிக் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
நாட்டின் நடப்பு பாதுகாப்பு மற்றும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா உள்ளிட்ட
பகுதிகளில் ஏற்பட்ட நில அமிழ்வு தொடர்பான ஆய்வுகளின்
அடிப்படையில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பத்து
தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் பி. பிரபாகரன் பிரதமரிடம்
வினவுவார்.


