காஸா, அக். 11 - ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்தின் ஷேக் ஜெர்ரா சுற்றுவட்டாரத்தில் 1,440 காலனித்துவ வீடுகளை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் முக்கிய தலைமையகத்தின் அருகில் இந்த நிலம் அமைந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கும் இடையிலான உறவுகளைத் துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலிய நெசெட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் வரைவு மசோதாவின் ஒப்புதலுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்சி கூறியது.
இந்த மசோதா இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு அடுத்த வாரம் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த பல நெசெட் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட மசோதாக்களின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.
மசோதாவின்படி, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் செயல்பட இஸ்ரேல் அனுமதித்த 1967ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
ஆகவே, அந்த அகதிகள் அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்புகள் தடைசெய்யப்படும்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்களுக்கு தூதரக விசாக்கள் வழங்கப்படுவதையும் அந்த மசோதா தடை செய்கிறது.


