ஷா ஆலம், அக். 10- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஈஜோக், ஜெஷெரியா
முதியோர் பராமரிப்பு இல்லத்தை துப்புரவு செய்யும் பணியில் கும்புலான்
செமெஸ்தா நிறுவனம் (கே.எஸ்.எஸ்.பி.) மாநில அரசின் ஒன்பது
நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டது.
அந்த இல்லத்திலிருந்த கட்டில், மெத்தை, போர்வை, தலையணை
போன்றவை வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில் 10,000 வெள்ளி
செலவில்அவற்றுக்கு மாற்றாக புதிய பொருள்களை தாங்கள் வழங்கியதாக
கே.எஸ்.எஸ்.பி. நிறுவனத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு உயர் அதிகாரி
முகமது மிர்ஸ் கமாருடின் கூறினார்.
உதவித் தேவைப்படுவோருக்கு அனைத்து வித சூழல்களிலும் உதவிகளை
வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த இல்லத்தில் குடியிருக்கும்
மூத்த குடிமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என
எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
அந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு இயக்கத்தில் சிலாங்கூர்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம்,
கோல சிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம், கோல சிலாங்கூர்
நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையம், ஈஜோக் தொகுதி சேவை
மையம் ஆகியவை பங்கு கொண்டன.


