(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 10 - குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்களில்
நீரோட்டம் தடைபடுவதற்கு குப்பைகள் முக்கிய காரணமாக
விளங்குவதால் குப்பைகளை அகற்றும் விஷயத்தில் மக்களிடையே
சிந்தனை மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று செந்தோசா சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
குத்தகைப் பணியாளர்கள் கால்வாய்களை முறையாக துப்புரவு செய்து
வந்த போதிலும் பொறுப்பற்றத் தரப்பினர் குப்பைகளை
கால்வாய்கள்களில் வீசுவதால் நீரோட்டம் தடைபட்டு மழை காலங்களில்
வெள்ளம் ஏற்படுவதாக அவர் சொன்னார்.
குப்பைகளை அகற்றுவதற்கு குத்தகையாளர்களை நாங்கள்
நியமித்துள்ளோம். வீடுகளில் சேரும் குப்பைகளை கால்வாய்களில்
வீசுவதைத் தவிர்த்து முறையாகக் குப்பைத் தொட்டியில் போடுங்கள் என்று
அவர் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார்.
நேற்று பெய்த அடைமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
கோத்தா ராஜா, தாமான் சாகாவில் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட்
மேனேஜ்மேண்ட் நிறுவனத்தினர் மேற்கொண்டு வரும் வடிகால் துப்புரவுப்
பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
பொது மக்கள் மத்தியில் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு
அதிகரிக்கப்படுவது அவசியமாகும் எனக் கூறிய அவர், இந்நோக்கத்தின் அடிப்படையில் செந்தோசா தொகுதியில் ஆண்டுதோறும் “கிளீன் அண்ட் கிரீன்“ எனும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறோம் என்றார்.
பள்ளிப் பருவம் தொட்டு தூய்மையின் முக்கியத்துவம் அனைவருக்கும்
போதிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் மக்களின் போக்கில் இன்னும்
மாற்றம் ஏற்படவில்லை. பல வீடுகளில் குப்பைத் தொட்டிகள் இல்லை.
குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி பொது இடங்களில் வீசி
விடுகின்றனர். பிராணிகளால் அந்த பைகள் கிழிக்கப்பட்டு குப்பைகைள்
கல்வாய்களில் விழுந்து நீரோட்டம் தடைபடுகிறது. ஆகவே, அனைத்து
வீடுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய சட்ட
அமலாக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
செந்தோசா தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு
வரும் பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்களின் வாயிலாக தூய்மையைப்
பராமரிப்பதில் பொதுமக்களிடையே சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது
என்றும் அவர் சொன்னார்.


