பெண்டாங், அக்.9: நேற்று காலை கம்போங் ரம்பையில் உள்ள பாழடைந்த
வளாகத்தின் அருகே ஒரு பெட்டியில் பிறந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
அவ்வளாகத்தில் உள்ள பெட்டியில் தொப்புள் கொடியுடன் புதியதாகப் பிறந்த
ஆண் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அச்சம்பவம் குறித்து அவரது
தரப்புக்கு காலை 8.08 மணிக்கு புகார் கிடைத்தது என பெண்டாங் மாவட்ட
காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி ரோஸ்லான் மாட் கூறினார்.
பின், காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்தனர். அக்குழந்தை 12 மணி
நேரத்திற்குள் பிறந்திருக்ககூடும் என நம்பப்படுகிறது. அக்குழந்தை ஒரு
பெட்டியில் துணியால் சுற்றப்பட்டு மக்கள் வசிக்காத வளாகத்தின் முன்
விடப்பட்டுள்ளது.
பிறப்பை மறைக்கும் நோக்கத்தில் பொறுப்பற்ற நபர்களால் குழந்தை
கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர் குழந்தை பெண்டாங்
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது மற்றும்
அக்குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது; என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து சமூக நலத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, பிறப்பை
மறைத்ததற்காகக் குற்றவியல் சட்டம் 317வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளதாக ரோஸ்லான் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல்
நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் அல்லது விசாரணை அதிகாரி முகமட்
அஃபெண்டி முகமட் யூனுஸை 04-7596222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு
விசாரணைக்கு உதவலாம் என்றும் அவர் கூறினார்.
– பெர்னாமா


