உலு சிலாங்கூர், அக்.9 - இம்மாவட்டத்தில் இரண்டாவது மீன் சரணாலயம் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
பத்தாங் காலி மற்றும் கெர்லிங் ஆகியவை கெலா மற்றும் தெங்காஸ் வகை மீன்களைப் பாதுகாப்பதற்கு உகந்த இடமாக உள்ளதாக அடிப்படை வசதி மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
சுங்கை சில்லிங் இந்த வகை உயிரினங்களுக்கு தனித்துவமான வாழ்விடம் என்பதை நாங்கள் அறிவோம். அதேசமயம் நாங்கள் உலு சிலாங்கூரில் மற்றொரு இடத்தையும் அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த இடத்தில் உள்ள உயர்தர நீரை பயன்படுத்தி இரண்டாவது மீன் சரணாலயத்தை அமைக்க வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள சுங்கை சில்லிங் மீன் சரணாலயத்திற்கு வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக, தாப்பா பிரதான மின் நிலையத்திலிருந்து உலு சிலாங்கூர் வழியாக பெந்தோங் சவுத் வரை செல்லும் தெனாகா நேஷனல் நிறுவனத்தின் 500 கே.வி. கன்வேயர் லைன் திட்டத் தளத்தை கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சாக் தாவோவுடன் இஷாம் பார்வையிட்டார்.
சுங்கை சில்லிங் மீன் சரணாலயம் 2009ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இது சிலாங்கூரில் உள்ள ஒரே மீன் சரணாலயமாகும். இங்கு கேலா மற்றும் டெங்காஸ் மீன்களை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழிகளில் பார்க்க முடியும்.
இப்பகுதி மீன்வளத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அழிந்து வரும் கேலா வகை மீன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


