தும்பாட், அக். 9 - கடல் போலீசார் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட
பொருள் கடத்தலுக்கு எதிரான 1,336 சோதனை நடவடிக்கைளை
மேற்கொண்டனர்.
சமையல் எண்ணெய், டீசல், கோதுமை உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட
பொருள்களை இலக்காக கொண்ட இந்த சோதனை நடவடிக்கைகளில் 19
கோடியே 34 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகப்
புக்கிட் அமான் கடல் போலீஸ் கமாண்டர் எஸ்ஏசி நோர்ஜைட் முகமது
ஜைட் கூறினார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் 1961ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச்
சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 8 கோடியே 23 லட்சம் வெள்ளி
மதிப்புள்ள பொருள்களும் கடந்த 2022ஆம் ஆண்டு 7 கோடியே 17 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் கடந்தாண்டு 3 கோடியே 93 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர்
சொன்னார்.
இக்காலக்கட்டத்தில் பெங்காலான் குபோர் மூன்றாவது பிராந்திய கடல்
போலீசார் 506 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு 60 லட்சம்
வெள்ளி மதிப்புள் கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்தனர் என்ற அவர்
கூறினார்.
நேற்று இங்கு நடைபெற்ற உள்நாட்டு வர்த்தக மாற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு மற்றும் கடல் போலீஸ் துறை
இடையிலான வியூக ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சோதனை நடவடிக்கைகளின் போது முறையான சட்ட அமலாக்கத்தை
உறுதி செய்யவும் குறிப்பாக 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச்
சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாகவும் இவ்விரு துறைகளும்
ஒன்றுபட்டுச் செயல்படுவது மிகவும் அவசியமானதாகும் என்று அவர்
குறிப்பிட்டார்.


