உலு சிலாங்கூர், அக். 9 - மாநிலம் முழுவதும் மலைச்சாரல்களுக்கான சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்.
கனிவளம் மற்றும் புவி அறிவியல் துறையால் தயாரிக்கப்பட்ட இந்த எஸ்.ஓ.பி. அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குகுழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.
இந்த எஸ்.ஓ.பி. இரண்டு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. முதல் கூறு இடர் ஆபத்து வரைபடமாகும்.... எந்த மலைச் சரிவுகள் ஆபத்தில் உள்ளன மற்றும் எப்போது சரியும் என்று எங்களுக்குத் தெரியாது, அதனால்தான் மேப்பிங் செய்யப்பட வேண்டும். இரண்டாவது கூறு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைமையிலான மேலாண்மை முறை ஆகும்.
மிதமான மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளையும் இந்த எஸ்.ஓ.பி. உள்ளடக்கும். இருப்பினும் இதுவரை அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் மூன்று பகுதிகள் உள்ளன - உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகியவையே அந்த மூன்று பகுதிகளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள தெனாகா நேஷனல் பிஎச்டி 500 கே.வி. கன்வேயர் லைன் திட்ட தளத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மண் சரிவு ஏற்படும் அபாயத்தில் உள்ள மலைச் சரிவுகள் பற்றிய அறிக்கை மேல் நடவடிக்கைக்காக காஜாங் நகராண்மைக் கழகம் சுபாங் ஜெயா மாநகர் மன்றம், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மற்றும் எம்.பி.ஏ.ஜே. ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது என்று கடந்த ஜூலை மாதம் அவர் கூறியிருந்தார்.


