கோலாலம்பூர், அக். 8- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா மற்றும் ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்ட வேளையில் சிலாங்கூரிலும் மலாக்காவிலும் நிலைமை சீரடைந்து வருகிறது.
கெடா மாநிலத்தில் இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 439 பேராக உயர்வு கண்டது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 305 பேராக இருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் குபாங் பாசு மாவட்டத்தில் மூன்று துயர் துடைப்பு மையங்களிலும் பெண்டாங்கிலுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக குபாங் பாசு மாவட்டத்தில் 252 பேரும் பெண்டாங்கில் 187 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பொது தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்.
கெடா மாநிலத்தில் இன்று முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, ஜோகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங், பொந்தியான், பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 601 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 173 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 186 பேராக இருந்தது. மலாக்காவில் நேற்றிரவு 23ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 22 பேராக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஜாசின், தெஹேல் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


