சிப்பாங், அக். 7- வெள்ளம் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தில்
திறக்கப்பட்ட மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் இன்று பிற்பகல்
வரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 248 பேர் தங்கியுள்ளதாகப் பேரிடர்
மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹிலிமி கூறினார்.
கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூரைச் சேர்ந்த இவர்கள் அனைவரும்
குண்டாங் எம்.பி.எஸ். மண்டபம் மற்றும் ஈஜோக், புக்கிட் பாடோங் தேசியப்
பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இறைவன் அருளால் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது.
பெட்டாலிங் டேவான் கெனாங்கான் மற்றும் ஸ்ரீ பாகி பாயா ஜெராஸ்
எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் செயல்பட்டு வந்த வெள்ள நிவாரண
மையங்கள் மூடப்பட்டு விட்டன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
பெரும்பாலனோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர் என்று அவர்
குறிப்பிட்டார்.
இருப்பினும், நிச்சயமற்ற வானிலை காரணமாக நாம் எப்போதும் தயார்
நிலையில் இருந்து வருகிறோம். பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதனை
எதிர்கொள்வதற்கு ஏதுவாகப் பாதுகாப்பு குழு முழு தயார் நிலையில்
உள்ளது என அவர் சொன்னார்.
ஸ்மார்ட் எனப்படும் மலேசிய சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழு
மையத்தில் இன்று நடைபெற்ற மாதிரி நிலச்சரிவு பேரிடர் மீட்பு
பயிற்சியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாயா ஜெராஸ் மற்றும் கோல சிலாங்கூரில்
உள்ள மண்டபங்கள் மற்றும் சூராவ் போன்ற வளாகங்கள் மற்றும்
வீடுகளை துப்புரவு செய்யும் மாநில அரசு தற்போது கவனம் செலுத்தி
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த துப்புரவு இயக்கத்தில் ஊராட்சி மன்றங்கள், டீம் செர்வ் சிலாங்கூர்
மற்றும் சில அரசு சாரா அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக அவர்
சொன்னார்.


