ஜோகூர் பாரு, அக். 7- ஜோகூர் மாநிலத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் அடுத்தாண்டு ஜனவரி ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக மாற்றப்படும்.
இந்த விடுமுறை மாற்றத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலும் ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறையின் கருத்தும் பெறப்பட்டதாக ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் கூறினார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலும் மாநில சமய இலாகாவின் கருத்தும் பெற்ற பிறகு 2025 ஜனவரி முதல் தேதி தொடங்கி ஜோகூரில் வார இறுதி விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக மாற்றப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன்.
இந்த விஷயத்தை ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்ந்து விவாதம் நடத்தும்படி ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி மற்றும் ஜோகூர் மாநில முஃப்தி ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று துங்கு மக்கோத்தா இஸ்மாயில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் தெரிவித்தார்.
அனைத்து தனியார் நிறுவனங்களும், அரசும் மற்றும் தொடர்புடைய தரப்பினரும் முஸ்லிம் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்கு போதுமான இடத்தையும் நேரத்தையும் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்ற பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஜோகூர் வார விடுமுறை நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளாக மாற்றுவது அமல்படுத்தப்பட்டது.
திரங்கானு, கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் தற்போது வார இறுதி விடுமுறையை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அமல்படுத்துகின்றன.


