கோலாலம்பூர், அக். 7- ஜோகூர், கெடா மற்றும் பேராக் ஆகிய
மாநிலங்களில் இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை உயர்வு கண்ட நிலையில் சிலாங்கூரில் வெள்ளம் சற்று
தணிந்து வருகிறது.
ஜோகூர் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 240
குடும்பங்களைச் சேர்ந்த 808 பேர் வெள்ளி நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8.00 மணிக்கு இந்த எண்ணிக்கை 60
குடும்பங்களைச் சேர்ந்த 195 பேராக இருந்தது.
பத்து பஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களில் புதிதாக
வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கு நேற்றிரவு கூடுதலாக வெள்ள
நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
நேற்றிரவு 8.30 மணிக்கு பொந்தியான் ஸ்ரீ அனோம் தேசிய பள்ளியில்
திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 120
தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச்
செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
பத்து பஹாட் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள ஒரு துயர் துடைப்பு
மையத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 14 போர் தங்கியுள்ளதாக
அவர் சொன்னார்.
குளுவாங்கில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து
இங்கு மேலும் ஆறு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இன்று
இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
மூவார், பொந்தியான், சிகாமாட், பத்து பஹாட் தங்காக் ஆகிய
மாவட்டங்களில் இன்று காலை வானம் மேமூட்டமாக காணப்பட்ட
வேளையில் மற்ற மாவட்டங்களில் வானிலை தெளிவாக காணப்பட்டது
என்றார் அவர்.
வெள்ளம் காரணமாக கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில்
புதிதாக இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கெடா
மாநில பொது தற்காப்பு படையின் துணைத் தலைவர் மேஜர் முகமது
சுஹாய்மி முகமது ஜைன் தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் இன்று
காலையில் அங்கு 83 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் நிவாரண
மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிவு இந்த எண்ணிக்கை 63
குடுமபங்களைச் சேர்ந்த 234 பேராக மட்டுமே இருந்தது.
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை சற்று சீரடைந்து வருகிறது.
நேற்றிரவு 57 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேராக இருந்த வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 50 குடும்பங்களைச்
சேர்ந்த 248 பேராகக் குறைந்தது.


