ஷா ஆலம், அக். 7- பூச்சோங், பண்டார் கின்றாரா2 (பி.கே.2) கால்பந்து
திடலை தரம் உயர்த்துவதற்கு கின்றாரா சட்டமன்றத் தொகுதி சார்பில்
40,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டின் போது பந்து திடலை விட்டு வெளியேறி அருகிலுள்ள
சாலையில் விழுவதை தவிர்க்கும் வகையில் திடலைச் சுற்றி தடுப்பு
வலைகள் அமைக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ
ஹான் கூறினார்.
இந்த திடல் வட்டார மக்களின் பொழுது போக்கு மையமாகவும்
கின்ராராவில் கால்பந்து பயிற்சிகளை நடத்துவதற்குரிய இடமாகவும்
விளங்குகிறது. ஆகவே இந்த திடலில் சீரமைப்புப் பணிகளை
மேற்கொள்வது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
இந்த திடலில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தும் பொது மக்களின்
நலனுக்காக இந்த சீரமைப்புத் திட்டம் வெகு விரைவில் தொடங்கப்படும்
என்று அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
கின்றாரா கால்பந்து பயிற்சித் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர்,
இங்குள்ள இளம் விளையாட்டாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக
டீம் சிலாங்கூர் மற்றும் எப்.ஏ. சிலாங்கூர் ஒத்துழைப்புடன் கடந்த
ஈராண்டுகளாக இங்கு கால்பந்து பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார்.
வழக்கமாக வார இறுதியில் நடைபெறும் இந்த பயிற்சியில் தொடக்கத்தில்
20 விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது ஐம்பது பேர் வரை
இதில் கலந்து கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் விளையாட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு
உள்ள காரணத்தால் அடுத்தாண்டும் இந்த பயிற்சித் திட்டத்தை
மேற்கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.


