ஷா ஆலம், அக். 4- ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான் தெங்கு
மக்கோத்தா இஸ்மாயிலுடன் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள
இஸ்தானா சிலாங்கூரில் சந்திப்பு நடத்தினார்.
இந்த ஒரு மணி நேர சந்திப்பில் ஆட்சியாளர்கள் ஸ்தாபனம் மற்றும்
உள்நாட்டு கால்பந்து நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து
சிலாங்கூர் சுல்தானும் தெங்கு மக்கோத்தாவும் விவாதித்ததாக சிலாங்கூர
அரச அலுவலகத்தின் பேஸ்புக் பதிவு கூறியது.
இந்த சந்திப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சிலாங்கூர் சுல்தான்
சந்திப்பின் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் என அப்பதிவு
குறிப்பிட்டது.
நாட்டிலுள்ள ஒன்பது ஆட்சியாளர்கள் மத்தியில் ஒற்றுமையும் ஆதரவும் நிலைத்திருப்பதன் அவசியத்தை சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.
மலாய் ஆட்சியாளர்கள் ஒற்றுமையுடன் ஒரே குழுவாகச் செயல்பட
வேண்டும் என்பதோடு மக்கள் தொடர்பான பிரச்சினைகள் எழும்போது ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என அவர் இச்சந்திப்பின் போது கூறினார்.
மக்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களின் நலன் காப்பதையும் தாண்டி தற்போது நிகழ்ந்து வரும் சமய விவகாரங்கள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளதால் இந்த ஒற்றுமை மிகவும் அவசியமானது என்றார் அவர்.
மக்களின் மதிப்பையும் அவர்களின் ஈடுபாட்டையும் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து அரச குடும்ப உறுப்பினர்களும் பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் நன்னடத்தையையும் உயரிய பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான விவகாரங்கள்
சமூக ஊடகங்களில் விவாதிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும்
சுல்தான் வலியுறுத்தினார்.








