கோலாலம்பூர், அக். 3 - அடுத்த மாதம் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக சிலாங்கூரிலுள்ள பல்வேறு அரசு துறைகளை உள்ளடக்கிய பேரிடர் மாதிரி மற்றும் நடைமுறைப் பயிற்சி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
பூச்சோங், பூலாவ் மெராந்தியில் நடைபெறும் இந்த வருடாந்திர பயிற்சி, பேரிடரை எதிர்கொள்ளும் போது மிகவும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் ஆக்ககரமான தகவல் தொடர்பு நிர்வாகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
தயார்நிலை மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள் தொடர்பில் அதிகாரிகள் உட்பட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் உள்ளடக்கிய மாநிலப் பேரிடர் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நேற்று நடத்தினோம்.
பூலாவ் மெராந்தியில் அடுத்த வாரம் அனைத்து ஏஜென்சிகளுடன் இணைந்து மாதிரி பேரிடர் பயிற்சியை நடத்துகிறோம். அனைத்து உபகரணங்கள் மற்றும் தளவாடங்களும் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக அங்கு சோதனை செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள பெவிலியன் எம்பஸி சூட்ஸில் சர்வதேச ரெக்கடோன் வடிவமைப்பு சிறப்பு விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
அனைத்து முயற்சிகளும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட மற்றும் நில அலுவலகம் உட்பட அனைத்து தரப்பினரும் சமூக நலத்துறையுடன் ஒத்துழைப்பதை தாங்கள் உறுதி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்காலிக வெள்ள நிவாரண மையங்களைத் திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை உடனடியாக செயல்படுத்துவோம். ஏதேனும் விரும்பத்தகாத பேரழிவுகள் ஏற்பட்டால் எங்களிடம் 1,000 க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று அவர் சொன்னார்.


