ஷா ஆலம், அக். 3 - நேற்று பிற்பகல் பெய்த கனமழையின் போது பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவில் உள்ள இலகு ரயில் (எல்.ஆர்.டி.) நிலையம் அருகே மரம் ஒன்று கார் மீது விழுந்தது.
இச்சம்பவத்தில் சிக்கிய 33 வயது பெண் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 7.39 மணிக்கு தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து டாமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் எட்டு உறுப்பினர்களும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகா எல்.ஆர்.டி. நிலையம் அருகே பெரோடுவா ஆக்ஸியா கார் மீது மரம் விழுந்தது கண்டறியப்பட்டது.
காரில் சிக்கிக் கொண்ட 33 வயது பெண் ஓட்டுநர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மற்றொரு சம்பவத்தில் கோம்பாக் செல்லும் சுங்கை பூசு சாலையில் மரம் ஒன்று விழுந்தது.
இதன் தொடர்பில் நேற்று மாலை 6.10 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும் செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அகமது முக்லிஸ் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தை அடைந்த போது ஒரு மரம் விழுந்து சாலையில் போக்குவரத்து தடைபட்டது கண்டறியப்பட்டது. எனினும் இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.


