அலோர்ஸ்டார், அக். 3 - இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேராகக் குறைந்துள்ளது. நேற்றிரவு 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள அலோர் மேரா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கெடா சிவில் தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்,
இதற்கிடையில், கோத்தா ஸ்டாரில் உள்ள சுங்கை கெடா ஆற்றின் நெடுஞ்சாலை பாலத்தில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவான 1.77 மீட்டரை தாண்டியதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறையின் பொது தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.
பேராக் மாநிலத்தில் இன்று காலை நிவரப்படி பாகான் செராயில் உள்ள சங்காட் லோபாக் வெள்ள நிவாரண மையத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்று மாலை பேராக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
கம்போங் பாரு கோல டிபாங்கில் உள்ள சுங்கை கம்பார் ஆற்றில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 21.79 மீட்டரை எட்டியுள்ளதாக வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்தது.


