கோலாலம்பூர், அக். 3- ஜாலான் சைட் புத்ராவிலுள்ள பள்ளி கட்டிடம்
ஒன்றிலிருந்து கீழே விழுந்து முதலாம் படிவ மாணவி ஒருவர்
உயிரிழந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.59 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ
மஷாரிமான் கூ மாமுட் கூறினார்.
அந்த பள்ளிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியிலிருந்து அந்த 13 வயது
மாணவி கீழே விழுந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்து
விட்டதை உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அந்த மாணவியின் உடல் சவப்பரிசோதனைக்காக பெட்டாலிங் ஜெயா,
மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அவரின் மரணத்தில் சூது நிகழவில்லை என்பது சவப்பரிசோதனையில்
தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொது
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் குறித்து
ஆருடங்களை வெளியிடுவதையோ சம்பவம் தொடர்பான படங்களை
சமூக ஊடகங்களில் பகிர்வதையோ தவிர்க்கும்படி அனைத்து
தரப்பினரையும் அவர் அறிக்கை ஒன்றின் வழி கேட்டுக் கொண்டார்.


