ஷா ஆலம், அக். 2 - ஷா ஆலம் மாநகரில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்காக ஒரு பிரத்தியேக சுற்றுலா செயல் திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் தயாரிக்கும்.
சுற்றுலா துறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கக்கூடிய இந்த செயல் திட்டம் மூலம் அத்துறையினர் பொருத்தமான நடவடிக்கைகளைத் தயாரித்து சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று ஷா ஆலம் இடைக்கால துணை டத்தோ பண்டார் கூறினார்.
2025 சிலாங்கூருக்கு வருகை தரும் ஆண்டு இயக்கத்தை வெற்றியடையச் செய்வதற்கு மாநகர் மன்றம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று மாடியன் பாவே விளக்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான முக்கிய நகரங்களில் ஷா ஆலம் ஒன்றாகும். நெடுஞ்சாலை மற்றும் நாட்டின் முக்கிய விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் காரணத்தால் இந்நகரம் போக்குவரத்து அல்லது தற்காலிக நிறுத்தமாக பயன்படுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் மூலம் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஒரு சுற்றுலா சுயவிவரக் குறிப்பை உருவாக்க முடியும். ஷா ஆலம் பற்றிக் கூறும்போது என்னென்ன ஈர்ப்புகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். இப்போது நம்மிடம் ஐ-சிட்டி உள்ளது. பல்பொருள் அங்காடிகள் மற்றும் மாமாக் உணவகங்கள் சுற்றுப் பயணிகளை ஈர்க்கககூடியவையாக விளங்குகின்றன. எனவே இங்குள்ள இடங்களை முன்னிலைப்படுத்துவது பொருத்தமானது என்று அவர் கூறினார்.
ஷா ஆலம் சுற்றுலா தலங்களின் இலக்கு குழு விவாதம், மதிப்பீட்டு ஆய்வு மற்றும் விவரங்கள் மீதான கலந்துரையாடல் நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.


