புத்ராஜெயா, அக். 2- பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் டஹாட் டத்து
ஊடுருவலின் போது மாமன்னருக்கு எதிராக போர் தொடுத்ததாக
குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பிலிப்பினோக்களுக்கு விதிக்கப்பட்ட மரண
தண்டனையை இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த எழுவரில் தன்னை சூலு சுல்தான் எனப்
பிரகனடப்படுத்திக் கொண்டுள்ள ஜமாலுல் கிராமின் உறவினரும் ஒருவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த எழுவரும் செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவை தலைமை
நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான
மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக நிராகரித்தது.
தலைமை நீதிபதி தெங்கு மைமுனுடன் மேல் முறையீட்டு நீதிமன்றத்
தலைவர் டான்ஸ்ரீ அமார் அபாங் இஸ்கந்தார், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி
டத்தோ நோர்டின் ஹசான் ஆகியோர் இந்த வழக்கை செவிமடுத்தனர்.
அனைத்து மனுதாரர்களின் விண்ணப்பங்களும் தள்ளுபடி
செய்யப்படுகின்றன. அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிலை
நிறுத்தப்படுகிறது என்று தலைமை நீதிபதி தெங்கு மைமுன் தனது
தீர்ப்பில் கூறினார்.
டத்து அமிர்பஹார் ஹூசேன் கிராம் (வயது 60), அத்திக் ஹூசேன் அபு
பாக்கார் (வயது 52), பாசாட் எச். மேனுவல் ( வயது 49), விர்கிலோ நெமார்
பதுலாடா (வயது 59), அல் வாஸிர் ஓஸ்மான் (வயது 68), தானி லஹாட்
டாஹி (வயது 70) மற்றும் ஜூல்ஹாம் ரஷிட் (வயது 75) ஆகியோரே அந்த
ஏழு குற்றவாளிகளாவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 12 மற்றும் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு
இடையே லஹாட் டத்து, கம்போங் தண்டியூவில் நிகழ்ந்த இந்த அத்துமீறல் சம்பவத்தில் பாதுகாப்பைப் படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாக தண்டனைச்
சட்டத்தின் 121வது பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத்
தொடர்ந்து அந்த ஏழுவருக்கும் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கடந்த
2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
அந்த அத்துமீறிலின் போது நிகழ்ந்த மோதல்களில்
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டதற்கான
சாட்சியங்களோ பாதுகாப்பு படையினரை அவர்கள் கொடூரமாக
கொன்றதற்கான ஆதாரங்களே இல்லை என நீதிபதி தனது தீர்ப்பில்
கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை
ஏற்றுக் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு
ஜூன் மாதம் 8ஆம் தேதி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை
விதித்தது.


