பெட்டாலிங் ஜெயா, அக். 2- உள் அலங்கார வடிவமைப்பாளர் ஒருவரை
இருபது முறை கத்தியால் குத்தி படுகொலை செய்ததாக வேலையில்லா
நபருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று
குற்றஞ்சாட்டப்பட்டது.
கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது
என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்படவில்லை.
இம்மாதம் 14ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் பண்டார் ஸ்ரீ டாமன்சாரா,
பெர்சியாரான் மெராந்தியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்
முகமது ஷர்க்காவி அபு பாக்கார் (வயது 36) என்ற உள் அலங்கார
வடிவமைப்பாளரை படுகொலை செய்ததாக அவருக்கு எதிராக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டைனை விதிக்க வகை
செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்காக இந்த
வழக்கை நீதிமன்றம் வரும் நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் நுராய்ன் ஷியாபிகுய்ன்
முகமது ராஸி வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்
சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
கொள்ளையிடும் நோக்கில் பாதிக்கப்பட்டவரின் வீட்டினுள் சந்தேகப்
பேர்வழி நுழைந்த வேளையில் கொள்ளையைத் தடுக்க முயன்ற போது
ஏற்பட்ட போராட்டத்தில் அவ்வாடவர் படுகொலை செய்யப்பட்டது
போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது


