ஷா ஆலம், அக். 2- பதிமூன்றாவது மலேசியத் திட்டத்தில்
பட்டியலிடப்பட்டுள்ள பணி இலக்குகளை நிறைவேற்றுவது தொடர்பான
மத்திய அரசின் சவாலை சிலாங்கூர் ஏற்றுக் கொண்டுள்ளது.
நடப்பு தொழில்நுட்பம் மற்றும் சமூகவியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல
சவால்களை மாநில அரசு எதிர்நோக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
நாம் எதிர்நோக்க வேண்டிய பெரிய சவால்களை நாம் அறிந்திருக்கவும்
புரிந்திருக்கவும் வேண்டும். அந்த சவால்களில் தொழில்நுட்பத்தை
கிரகித்துக் கொள்வதில் நமக்குள்ள ஆற்றலும் ஒன்றாகும் என்று அவர்
சொன்னார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நேற்று
நடைபெற்ற 13வது மலேசியத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வில்
அவர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்தாய்வு
நிகழ்வில் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, மாநில அரசு செயலாளர்
டத்தோ ஹாரிஸ் காசிம், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை
பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து
கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய ரபிஸி, பதிமூன்றாவது மலேசியத்
திட்டத்தை நனவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும்
அதேவேளையில் பெரிய அபிலாஷைகளுடன் தங்களின் பொருளாதாரத்
திட்டங்களை தொடங்கும்படி மாநில அரசுகளுக்கு சவால் விடுத்தார்.
நிலை தன்மையற்ற புவி அரசியல் உள்ளிட்ட சவால்களை நாடு
எதிர்நோக்க வேண்டியுள்ளதை தமதுரையில் சுட்டிக்காட்டிய அமிருடின்,
நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மக்கள்
மனப்போக்கில் மாற்றம் ஆகியவை இதர சவால்களில் அடங்கும் என்றார்.
பதிமூன்றாவது மலேசியத் திட்டம் ஆறு அல்லது ஏழு மாதங்களில்
தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வரும் 2025
ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


