புத்ராஜெயா, அக். 2- நேப்பாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும்
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக
காட்மாண்டுவுக்கு கொண்டு வரப்பட்டதை வெளியுறவு அமைச்சு
உறுதிப்படுத்தியது.
கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி தலைநகர் காட்மாண்டு உட்பட
நாட்டின் பல மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் மழை பெய்து
வருவதை தொடர்ந்து அங்குள்ள நிலவரங்களை தாங்கள் அணுக்கமாக
கவனித்து வருவதாக அமைச்சு கூறியது.
காட்மாண்டு பள்ளத்தாக்கிற்கு வெளியில் உள்ள அனைத்து
வழித்தடங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அழிந்துள்ளதால்
நிலைமை சீராகும் வரை அந்நாட்டிற்கு வருகை புரிவதை ஒத்தி
வைக்கும்படி மலேசியர்களை அது கேட்டுக் கொண்டது.
தற்போது நேப்பாளத்தில் தங்கியிருக்கும் மலேசியர்கள் மிகவும்
விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் அதிகாரிகள் வழங்கும்
உத்தரவுகளை பின்பற்றி நடக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காட்மாண்டுவில் உள்ள தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யாத
மலேசியர்கள் https://ekonsular.kln.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக
தங்களைப் பதிந்து கொள்ளும்படி அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி
கேட்டுக் கொண்டது.
நேப்பாளத்தில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை கன மழை பெய்யும்
என அந்நாட்டின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வு துறை கணித்துள்ளது.
நேப்பாளத்தின் வரலாற்றில் இதுவே மிகவும் மோசமான மழை என்று
அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை முகமை
தெரிவித்தது.இந்த பேரிடரில் இதுவரை குறைந்த து 200 பேர்
பலியாகியுள்ளதோடு மேலும் 26 பேரைக் காணவில்லை.


