வரிவிதிப்பு மீதான அனுகுமுறைகளை வரி செலுத்துவோர் அறிந்துக் கொள்ள அதன் விவரங்களை வருமான வரி வாரியத்தின் இணையத்தளம் வாயிலாக தாங்கள் வெளியிட்டு வருவதாக அந்த வாரியத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு சட்டப் பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி நூர் ஷியாஸ்வானி ஹம்சா கூறினார்.
இது தவிர, வரி செலுத்துவோரின் வரிவிதிப்பு நிலையைப் பற்றிய தகவல்களை வரி செலுத்துவோரின் சமீபத்திய முகவரிக்கு கடிதம் அல்லது அறிவிப்பு மூலமும் வருமான வரி வாரியம் அனுப்புகிறது.
ஆகவேதான் வரி செலுத்துவோர் தங்கள் சமீபத்திய முகவரியை வருமானவரி வாரியத்தின் MyTax அகப்பக்கத்தில் உள்ள இ-அப்டேட் வாயிலாக அல்லது எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோருகிறோம் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டுப் பயணத்தைத் தீர்மானிப்பதற்கு முன் பொதுமக்கள் தங்களின் சமீபத்திய வரி நிலை மற்றும் பயணக் கட்டுப்பாடு தொடர்பான நிலவரங்களை முன்கூட்டியே MyTax செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த ஆண்டில் வரி செலுத்துவோர் மீது கவனம் செலுத்தும் அதேவேளையில் வரிவிதிப்பு மற்றும் வருமான வரி வாரியம் பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூறினார்
தற்போதுள்ள வரிவிதிப்புச் சட்டங்களை வலுப் படுத்துவதோடு தன்னார்வ வரி செலுத்துபவராக பொது மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற அவர்களுக்கு உரிய போதனைகளையும் வழங்கும் என அவர் சொன்னார்.
பொதுமக்கள் மற்றும் வரி செலுத்துவோரில் சிலர் இன்னும் வருமான வரி வாரியத்தை அச்சத்திற்குரிய நிறுவனமாகப் பார்க்கிறார்கள். அதிகபட்ச இணக்கச் சூழலை உருவாக்கும் முயற்சிகளுக்கு இதுவே இடையூறாகவும் இருக்கிறது என்று சியாஸ்வானி கூறினார்.


