வாஷிங்டன், அக்.1- லெபனான் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதலில் சிறார்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகளின் சபையின் சிறார்கள் நிதியத்தின் (யுனிசெஃப்) நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்செல் கவலை தெரிவித்துள்ளார்.
லெபனானில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். கடந்த வாரம் நிகழ்ந்த தாக்குதல்களில் குறைந்தது 80 சிறார்கள் கொல்லப்பட்ட வேளையில் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டிய ரஸ்செல், இந்த வன்முறையால் 300,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர் என்றார்.
ஆயிரக்கணக்கான சிறார்கள் உள்பட குடும்பத்தினர் இப்போது தெருக்களில் அல்லது புகலிடங்களில் வாழ்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மனிதாபிமான நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
யுனிசெஃப் மற்றும் அதன் பங்காளிகள் லெபனானில் சிறார்கள் மற்றும் குடும்பங்களுக்கு குடிநீர், மருத்துவ பொருட்கள், மெத்தைகள் மற்றும் போர்வைகள், சுகாதாரம் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கின்றனர் என்றார் அவர்.
நாங்கள் சிறார்களுக்கு உடல்நலம், ஊட்டச்சத்து சேவை, குழந்தை பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உளவியல் ஆதரவை வழங்குகிறோம்.
ஆனால் வன்முறை அதிகரிக்கும் போது மனிதாபிமான தேவைகளும் அதிகரிக்கின்றன. லெபனானில் நிகழக்கூடிய தரைத் தாக்குதல் சிறார்களின் பேரழிவு நிலைமையை மோசமாக்கும். அத்தகைய முடிவு எந்நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


