புத்ராஜெயா, அக். 1- நாளுக்கு நாள் சிரமமானதாகவும் சிக்கலானதாகவும்
ஆகி வரும் குற்றச்செயல்களுக்கு ஏற்ப விசாரணையில் புதிய தொழில்நுட்பத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அறிமுகப்படுத்தி வருகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது
விசாரணை முறை பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளதோடு திறந்த ஆதார
முறையின் வாயிலாக அதன் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று
எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
இந்த திறந்த ஆதார முறையின் கீழ் சந்தேக நபரின் சுயவிபர
ஆதாரங்களை குறுகிய காலத்தில் திரட்ட முடியும் என்று
எஸ்.பி.ஆர்.எம்.மின் 57ஆம் ஆண்டு நிறைவையொட்டி அண்மையில்
வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் உளவு மற்றும் விசாரணை பணிகளை மேற்கொள்ளும்
பாணியை நாங்கள் தரம் உயர்த்தியுள்ளோம். ஐந்தாண்டுகளுக்கு முன்னர்
களத்தில் உள்ள உளவு அதிகாரிகளை அதிகம் சார்ந்திருந்தோம். ஆனால்
இப்போதும் நம்மிடம் இருக்கும் முறையைப் பயன்படுத்தி சந்தேகப்
பேர்வழியை அடையாளம் கண்டு ஆய்வு மேற்கொள்கிறோம் என்றார்
அவர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக ஊழல் சம்பவம் தொடர்பான
உளவு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை விரைவாகவும் சீராகவும்
முறையாகவும் செய்ய முடிகிறது. இதன் அதிக அளவிலான சந்தேக
நபர்களை நீதிமன்றத்தி நிறுத்துவதற்குரிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்று
அவர் குறிப்பிட்டார்.
ஊழலில் ஈடுபடும் நபர்கள் சட்டவிரோதமாக கிடைத்த பணத்தை சேமித்து
வைப்பதற்குரிய புதிய தளமாக கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே, இணைய பாதுகாப்பு மற்றும் கிரிப்டோ கரன்சி துறைகளில் எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளின் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


