கோலாலம்பூர், அக். 1- சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும்
சுபாங் ஜெயாவிலுள்ள பொது இடம் ஒன்றில் ஆடவர் ஒருவர்
துப்பாக்கியால் சுடுவதைச் சித்தரிக்கும் காணொளி சுபாங் ஜெயா மாநகர்
மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காக்கை சுடும் நடவடிக்கையின் ஒரு
பகுதியாகும்.
கடந்த மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த காக்கை
சுடும் நடவடிக்கைக்கு சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின்
சுடும் ஆயுத லைசென்ஸ் பிரிவு அனுமதி வழங்கியுள்ளதாக சுபாங் ஜெயா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட்
கூறினார்.
இந்த நடவடிக்கையில் லைசென்ஸ் வைத்திருக்கும் 25 பொது மக்களும்
கலந்து கொண்டதோடு சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு ஏற்ப உரிய
பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த காக்கை சுடும் நடவடிக்கை குறித்து சுபாங் ஜெயா நகராண்மைக்
கழகம் அறிக்கை வாயிலாக பொது மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக
அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
காக்கைகளை அழிக்கும் நடவடிக்கையை எந்தவொரு விரும்பத்தகாத
சம்பவங்களும் இன்றி சீரான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள்
மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான காணொளிகள் அல்லது
ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக்
கொள்கிறோம் என்றார் அவர்.


