ஈப்போ, அக். 1- ஜெலப்பாங்கில் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் எம்.பி.வி. எனப்படும் பல்நோக்கு வாகனத்தை திருடிய சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கருப்பு நிற டோயோட்டா அல்பார்ட் ரக வாகனம் விடியற்காலை 4.15 மணியளவில் திருடு போனது தொடர்பாக அதன் உரிமையாளரிடம் இருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.
அந்த வாகனத்தை 43 வயதான அதன் உரிமையாளர் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறிய அவர், அனாமதேய நபர் அந்த வாகனத்தை திருடிச் சென்றது கண்டு காவல்துறையில் புகார் அளித்தார் என்றார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 379(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த அல்பார்ட் ரக க்காரை அடையாளம் தெரியாத நபர் வீட்டு வளாகத்திலிருந்து வெளியே பின்னோக்கி எடுப்பதை சித்திரிக்கும் 15 விநாடி காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.


