NATIONAL

வெள்ளம், நிலச்சரிவின் எதிரொலி-  நேபாளத்திற்கான பயணத்தை ஒத்தி வைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

1 அக்டோபர் 2024, 3:13 AM
வெள்ளம், நிலச்சரிவின் எதிரொலி-  நேபாளத்திற்கான பயணத்தை ஒத்தி வைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், அக். 1 - நேப்பாளத்தில் பெய்து வரும்  தொடர் மழையால்  வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு  தொடர்பு  வலையமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டிற்கான   பயணத்தை ஒத்தி வைக்க  மலேசியர்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி  முதல் பெய்து வரும்  தொடர் மழை காரணமாக நாடு முழுவதும் பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக   நேபாளத் தலைநகர்  காட்மாண்டுவில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி முகமது பிர்டாவுஸ் அஸ்மான் கூறினார்.

இன்று  முதல் இந்த வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என நேப்பாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காட்மாண்டுவில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளும் தற்போதைக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்கள் பயணத்தை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்குமாறு  நேப்பாளத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு  நாங்கள் அறிவுரை கூறுகிறோம்.

அவர்கள் காட்மாண்டு நகருக்கு  வந்தால்  துண்டிக்கப்பட்ட சாலைகளால் அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பார்கள். மேலும், நீர் மட்டம் இன்னும் அதிகமாக உள்ளதோடு காட்மாண்டுவை இணைக்கும் பாலமும் முற்றாக அழிந்து விட்டது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதி பாதுகாப்பானது என  அறிவிக்கும் வரை மற்றும் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படும் வரை நேபாளத்திற்கான பயணத்தை தற்போதைக்கு ஒத்திவைக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் அவசர வேளைகளில் தூதரகத்தை தொடர்பு கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மோசமான வானிலை யைத் தொடர்ந்து காட்மாண்டுவில் உணவுப் பொருட்களின் விலை  இருமடங்காக உயர்ந்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக விவசாயப் பகுதிகள் பாதிக்கப்பட்டு, உணவு விநியோகம் துண்டிக்கப் பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து அமைப்பு பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கு உணவின் விலை  இருமடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 25 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோர் பொக்காராவிலிருந்து காட்மாண்டுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அவர். உள்ளூர் முகவர்கள் மற்றும் தூதரகத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக காட்மாண்டு வந்தடைந்தனர்  என்று அவர் கூறினார்.

உதவி தேவைப்படும் மலேசியர்கள் நேப்பாளத்தில் உள்ள மலேசிய தூதரகத்தை +977-9801008000 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.