கோலாலம்பூர், செப். 30 - மடாணி பொருளாதாரத்திற்கு ஏற்ப நாட்டில் வசதி குறைந்த தரப்பினரின் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்
கல்வித் துறையை உதாரணம் காட்டிய அவர், அரசினால் உருவாக்கப்பட்ட கல்வி வசதிகளை அனுபவிக்கும் பணக்காரர்களின் பிள்ளைகளும் உள்ளனர் என்றார்.
எனக்குத் தெரிந்த வரை பயனடைவோரில் பெரும்பாலோர் மூத்த அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்முனைவோர் போன்ற உயர்நிலைத் தரப்பினரின் பிள்ளைகளாக உள்ளனர். இவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்கத்தின் நிதியுதவியில் நடத்தப்படும் சிறந்த பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள், இது நியாயமற்றது என்றார் அவர்.
பணக்காரர்களின் பிள்ளைகளை பொறியியல் துறைக்கு அனுப்பப்பட வேண்டுமானால் (மலாயா, சீன அல்லது இபான்) அவர்கள் பணம் செலுத்த வேண்டும். இதன்வழி நாம் தேவையை பூர்த்தி செய்யலாம். இல்லையெனில் இந்த மானியம் தொடரும். இந்த வருமானத்தை ஏழைகளுக்கு மேலும் உதவப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
புத்ராஜெயாவில் இன்று “தேசிய ஆய்வரங்கம்: வறுமையை ஒழித்தல்” எனும் நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியும் கலந்து கொண்டார்.
பணக்காரர்களின் பிள்ளைகளுக்கான கல்வி மானியம் உட்பட அனைத்து வகையான நிதிக கசிவுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சருமான அன்வார் சொன்னார்.


