குவாந்தான், செப் 30 - கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 42வது
கிலோ மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஏழு வாகனங்கள்
சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் பலியானதோடு மேலும் எழுவர்
காயங்களுக்குள்ளாகினர்.
இந்த விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.13 மணியளவில் தாங்கள்
அவசரத் தகவலைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
நான்கு கார்கள், ஒரு மூன்று டன் லோரி, இரண்டு டிரெய்லர்கள்
சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஒன்பது ஆண்களும் நான்கு பெண்களும்
பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த விபத்தில் ஒரு டிரெய்லர் லோரி முற்றாகத் தீக்கிரையானதோடு
பலர் வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு
வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வாகனங்களில் சிக்கிக்
கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு டிரெய்லர்
லோரியில் ஏற்பட்ட தீயையும் அணைத்தனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் முகமது ரிடுவான் ஜூல்கிப்ளி (வயது 40) முகமது ஜைமி
ஷாரிப் (வயது 39) மற்றும் முகமது அஜிசுல் பித்ரி முகமது ஜைரி (வயது
23) ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் உடல்கள்
அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த விபத்தில் காயமுற்ற இரு பெண்கள் தீயணைப்புத் துறையின்
அவசரச் சேவை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்ட வேளையில் படுகாயமடைந்த மூன்று ஆடவர்களை சுகாதார
அமைச்சின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு கொண்டுச்
சென்றன என்று அவர் சொன்னார்.
பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு
உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட இந்த மீட்பு நடவடிக்கை
அதிகாலை 5.50 மணிக்கு நிறைவடைந்த து என்று அவர் குறிப்பிட்டார்.


