அலோர்ஸ்டார், செப். 28- கெடா மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59 குடும்பங்களைச் சேர்ந்த 243 பேராக உயர்வு கண்டதோடு குபாங் பாசு மாவட்டத்தில் புதிதாக ஒரு வெள்ளத் துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேராக மட்டுமே இருந்ததாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அறிக்கை கூறியது.
சங்லுன் தேசிய இடைநிலைப்பள்ளியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இதனிடையே, பெண்டாங் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேராக உள்ளது. அவர்கள் அனைவரும் பெண்டாங் மற்றும் தானா மேராவில் உள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கம்போங் பாடாங் பாசீரில் உள்ள சுங்கை லாக்கா, சுங்கை சாரியின் பாடாங் தெராப் சீனி உற்பத்தி ஆலைப் பகுதி சுங்கை பெரிக்கின் கம்போங் பெரிக் பகுதியில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளதாக மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் கூறியது.








