பத்தாங் காலி, செப். 27- நாட்டில் மாணவர்கள் கல்வியைப் பாதியில்
கைவிடும் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசாங்கம் எடுத்து வரும்
நடவடிக்கைகள் சாதமான பலனைத் தருவதை உறுதி செய்வதற்கு
அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.
நமது பிள்ளைகள் கல்வியைப் பாதியில் கைவிடுவதை அப்படியே விட்டு
விட முடியாது எனக் கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
அவர்களின் திறனை மேம்ம்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு முழு
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
கல்வியில் அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பையும் வசதிகளையும் நாம்
தர வேண்டும். கல்வியைக் கைவிடுவது ஒரு புதிய பிரச்சினை இல்லை.
ஆயினும், கோவிட்-19 போன்ற சிக்கல்களை எதிர்நோக்கியச் சூழலில் இந்த
பிரச்சனை சிக்கலானதாகவும் சவால்மிக்கதாகவும் ஆகிவிட்டது என்று
அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் பொறுப்புடன்செயல்பட வேண்டும்.
கல்வியைக் கைவிடும் மாணவர்களை கரையேற்றுவதற்காக
ஆசிரியர்களின் சுமையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு
ஏற்படுகிறது. நமது பிள்ளைகளும் கிடைக்கின்ற வாய்ப்பினை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் மீண்டும்
உயிர்தெழுவதற்கும் சுவாசிப்பதற்கும் இயலாது என்பதற்கு எந்த
காரணமும் கிடையாது என்றார் அவர்.
இங்குள்ள ராசா தேசியப் பள்ளியில் நடைபெற்ற “நமது பிள்ளைகள்-
மலேசியாவின் பிரகாசமான வாய்ப்புகள்“ எனும் இயக்கத்தின் தொடக்க
நிகழ்வுக்கு வழங்கிய உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார். அவரது
உரை இந்நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் மற்றும் இரண்டாவது
நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சான் அஜிசான் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வியமைச்சுக்கு 5,870
கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் கல்வியைக்
கைவிடும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட
அனாக் கித்தா திட்டத்திற்கு மேலும் 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என்று அன்வார் தெரிவித்தார்.


