ஷா ஆலம், செப். 27- சுங்கை குவாங் கால்வாயில் நுரையுடன் கூடிய நீர்
மாசுபாடு தொடர்பில் விசாரணை அறிக்கையை லுவாஸ் எனப்படும்
சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் திறந்துள்ளது.
நீர் வளங்களை மாசுப்படுத்திய தரப்பினருக்கு எதிராக அந்த வாரியத்தின்
அனைத்துச் சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடின் கூறினார்.
சுங்கை குவாங் கால்வாய் நீர் நுரையுடன் காணப்பட்டதற்கு பல்வேறு
நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் மற்றும் தரையைச் சுத்தம் செய்யப்
பயன்படும சோப்பு சார்ந்த பொருள்கள் அடங்கிய 45 ஐ.பி.சி. கலன்களே
காரணம் எனத் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
அந்த கலன்கள் உடைந்துள்ளதோடு அதில் கசிவும் ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து கலவை வெளியேறி பல்நோக்கு மண்டபம் அருகிலுள்ள
கால்வாய் வழியாக சுங்கை குவாங் ஆற்றில் நுழைந்து இறுதியில் சுங்கை
சிலாங்கூர் ஆற்றில் கலந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இந்த நீர் மாசுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து லுவாஸ், சுற்றுச்
சூழல் இலாகா, செலாயாங் நகராண்மைக் கழகம், கோம்பாக் மாவட்ட நில
அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அபாயகர இரசாயன
பிரிவு ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
சுற்றுச்சூழல் துறை அந்த ஆற்று நீரின் மாதிரியை சோதனைக்காக
எடுத்துள்ளதாக கூறிய அவர், அபாயகர இரசாயனமாக இல்லாத பட்சத்தில்
அப்பகுதியைச் சுத்தம் செய்யும் பணியை செலாயாங் நகராண்மைக்
கழகம் மேற்கொள்ளும் என்றார்.
அதே சமயம், அவை இரசாயனப் பொருள்கள் என்பது தெரிய வந்தால்
சற்றுச்சூழல் துறையினால் நியமிக்கப்படும் குத்தகையாளர் துப்புரவு
பணிகளை மேற்கொள்வார் என அவர் மேலும் சொன்னார்.


