பாங்கி, செப். 26 - நாட்டின் கட்டுமானத் துறையில் நிகழும் ஊழல், நிர்வாக பலவீனங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தீவிர கவனம் செலுத்துகிறது.
இந்த கட்டுமானத் துறை சாலை மற்றும் கட்டிட கட்டுமானத் திட்டங்களில் ஊழல் நிகழ்வதற்கு அதிக வாய்ப்பினைக் கொண்டுள்ளதோடு அரசாங்க குத்தகைத் திட்டங்களில் விலை உயர்வு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
கட்டுமானத் துறை மீதான எம்.ஏ.சி.சி.யின் தற்போதைய கவனம் மத்திய மற்றும் மாநில நிலையில் குத்தகைத் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களை மையமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ள துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்றாகும். மேலும் நாங்கள் அரசாங்கத்தை உள்ளடக்கிய ஒப்பந்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை (கட்டுமானத் துறை) உண்மையில் நிறைய கசிவு இருப்பதை நாங்கள் காண்கிறோம் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு 2024ஆம் ஆண்டிற்கான 3வது தேசிய அளவிலான உயர்நெறி, ஒருமைப்பாடு மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆராய்ச்சி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
கட்டுமானத் துறையில் நிகழும் ஊழல், நிர்வாக பலவீனங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்சனைகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


