ஈப்போ, செப்.26 - 101 மாணவர்களுக்கு நச்சுணவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, செப்போர் தேசிய பள்ளியின் சிற்றுண்டிச்சாலையை அக்டோபர் 8ம் தேதி வரை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப் பட்டுள்ளது.
உணவுச் சட்டம் 1983 பிரிவு (11) இன் கீழ், அப்பள்ளி சிற்றுண்டிசாலையின் பராமரிப்பு திருப்திகரமாக இல்லை. அதன் மதிப்பீடு 67.9 சதவீதமாக மட்டுமே உள்ளதாகப் பேராக் சுகாதார இயக்குநர் டாக்டர் ஃபைசுல் இட்ஸ்வான் முஸ்தபா கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், பள்ளி சிற்றுண்டிசாலையின் சமையலறையில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் சுவை கொண்ட பானம் மற்றும் வறுத்த கோழியால் நச்சுணவு சம்பவம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
"செப்டம்பர் 24 அன்று விற்கப்பட்ட சாக்லேட் சுவை கொண்ட பானத்தில் கெட்டுப்போன வாசனை வந்ததாக மாணவர்கள் புகார் செய்தனர், அதே நேரத்தில் வறுத்த கோழியின் சில பகுதிகள் சரியாக வேகாமல் இருந்ததாக தெரிய வந்தது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"இச்சம்பவத்தால் 101 பாதிக்கப்பட்டுள்ளனர் (50 பெண் மற்றும் 51 ஆண் மாணவர்கள்)," என்று அவர் தெரிவித்தார்.


