(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப்.26 - சிலாங்கூர் மாநில அரசின் இவ்வாண்டிற்கான தீபாவளிக் கொண்டாட்டம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நடைபெறவுள்ளது.
மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த கொண்டாட்டம் இரவு 7.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த 2024 தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று மாநில அரசு தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றம், மாநில அரசின் பொருளாதார திட்டமிட பிரிவு, கிள்ளான் மருத்துவமனை, பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில மிகவும் சிறப்பான முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு அங்கமாக ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக கிள்ளான் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வர்த்தக உபகரணங்களுக்கான மாதிரி காசேலைகளை வழங்கும் அங்கமும் இடம் பெறும்.
அதோடு மட்டுமின்றி இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரிலுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசின் சார்பாக மானியம் வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.


